தமிழ்நாடு

மயிலாடுதுறை: புனித அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் படையல் வழிபாடு!

webteam

மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் படையல் வழிபாடு நடைபெற்றது.

தங்களது பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பொங்கல் வைத்து படையல் இட்டு, குலவையிட்டு கும்மி அடித்தும், கொண்டாடினர். குழந்தை வரம் வேண்டிய தம்பதியினர் பிரார்த்தனை செய்து ஒரே வாழை இலையில் பொங்கல் உண்டும் தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் மேலையூரை அடுத்த கஞ்சாநகரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புத்திர பாக்கியம் வேண்டியும், நோய் தீர வேண்டியும், திருமண வரம் வேண்டியும் 50 ஆண்டுகளாக பக்தர்கள் பொங்கல் படையல் வைத்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி அந்தோணியார் ஆலய வளாகத்தின் இரு புறங்களிலும் பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்து அந்தோனியாருக்கு இன்று படையல் இட்டனர். இவ்வாறு படையலிடப்பட்ட பொங்கல் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கும் தம்பதியினருக்கு ஒரே வாழை இலையில் பரிமாறப்பட்டது. இந்த பொங்கலை உண்ணுபவர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும், கடந்த ஆண்டு திருமண வரம், புத்திர பாக்கியம் வேண்டி பிரார்த்தித்த பொதுமக்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதையடுத்து கோயிலின் முன்பு கும்மியடித்து, குலவையிட்டு அந்தோணியாருக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பெண்கள் தாங்கள் படைத்த பொங்கல் பானையை அன்னக்கூடையில் வைத்து தங்கள் வீடுகளுக்கு வரிசையாக கொண்டு சென்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.