தமிழ்நாடு

வேரோடு சாய்ந்த மரம்.. ஒருவர் பலி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

webteam

சாலையில் நடந்து சென்ற நபரின் மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  மரம் வேரோடு நடந்து சென்ற நபர் மீது விழும் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் பெண்கள் பள்ளிக்கு எதிரில் உள்ள மரம் ஒன்று சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மீது எதிர்பாராத நேரத்தில் திடீரென விழுந்தது. அவருக்கு பின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே வேரோடு சாய்ந்த மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினர். இறந்து போன நபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.