மென்பொறியாளர் சுவாதி இறந்து ஓராண்டை கடந்துவிட்டநிலையில், இப்போதுதான், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல, சென்னை ரயில்வே கோட்டத்தில், 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்தான் மென்பொறியாளர் சுவாதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அப்போதே, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கில் சிசிடிவி பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஒரு கொலை நடந்து ஓராண்டை கடந்த பிறகு இப்போதுதான் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களை இணைக்கும் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 82 ரயில் நிலையங்களில் 54 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தமிழக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்.