செந்தில் பாலாஜி Pt web
தமிழ்நாடு

டெல்லி | கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை.. இன்று ஆஜராகிறார் செந்தில் பாலாஜி.!

தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜாராகி விளக்கமளிக்கவுள்ளார்.

Premkumar S

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிழந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் நடந்த இத் துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பொதுக்கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெக தரப்பில் இருந்து காவல்துறை போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என குற்றம் சாட்டியது. மேலும், இதற்கு முன்னர் நடந்த நாமக்கல், திருவாரூர் போன்ற எந்த பரப்புரைகளிலும், இது போன்ற அசம்பாவிதம் ஏற்படவில்லை கரூரில் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இதில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதி இருக்கிறது எனவும் தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டி வந்தனர்.

கரூர்

இந்த சூழலில் தான், கரூர் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முதலாவதாக, தவெக நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி தவெக தலைவர் விஜய் விளக்களித்திருந்தார். தொடர்ந்து, 3-ம் கட்டமாக நேற்றைய முன் தினம் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகியிருந்தார். இந்த சூழலில் தான், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச் 17) சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்படி சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி இன்று, சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவதற்காக செந்தில் பாலாஜி டெல்லி சென்றுள்ளார்.

முன்னதாக, இந்த சம்மன் குறித்துப் பேசியிருந்த செந்தில் பாலாஜி, ”மார்ச் 17ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, நேரில் ஆஜராகி உரிய பதில்களை அளிப்பேன். அதேசமயம், தவெக அனுமதி வாங்கி கூட்டம் நடத்தியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதியளித்திருக்கிறது. ஆனால், எதன் அடிப்படையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.