தமிழ்நாடு

குட்கா விவகாரத்தில் ஆறு காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

webteam

குட்கா விவகாரத்தில் காவல் அதிகாரிகள் 6 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்காக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, குட்கா ஆலை அதிபர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தது.

அதே போல் குட்கா ஊழல் நடந்ததாக கூறப்படும் காலத்தில் சென்னை காவல்துறையில் துணை ஆணையராக பணியாற்றிய ஜெயக்குமார், ஆய்வாளராக பணியாற்றிய சம்பத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. ஏற்கனவே முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளது சிபிஐ. இந்நிலையில், குட்கா விவகாரத்தில் காவல் அதிகாரிகள் 6 பேரிடம் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஜார்ஜ் பணியில் இருந்தபோது மாதவராவ் ஆலையில் சோதனை நடத்திய காவல் அதிகாரிகளிடம்தான் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களின் பெயர்கள் மற்றும் தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.