union minister Kishan Reddy
union minister Kishan Reddy pt desk
தமிழ்நாடு

பாஜக அரசியலுக்காக அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறதா? - மத்தியமைச்சர் கிஷன் ரெட்டி கொடுத்த பதில்

webteam

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம் கடற்கரையில் பாஜக மருத்துவப்பிரிவு சார்பில் ஜி20 மாநாட்டை குறிக்கும் வகையிலும், கொரோனாவில் வழங்கப்பட்ட மருந்துகள், அதற்கான செலவினங்கள் குறித்தும், நாடாளுமன்றம், மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் கூடிய செங்கோலையும் மணல் சிற்பமாக வரைந்திருந்தனர்.

Kishan Reddy

இந்த மணல் சிற்பத்தை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இதையடுத்து பெசன்ட் நகரில் மீனவர்கள் குறைகள் கேட்பு முகாமும், 102-வது மனதில் குரல் நிகழ்விலும் கலந்து கொண்டு மீனவ மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர், மகளிர் சுயஉதவிக் குழுவை தொடங்க பாஜகவினர் பெண்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார். அவர்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்க தான் உதவுவதாக தெரிவித்தார்.

ரேஷன் அரிசி, கொரோனா தடுப்பூசி இவையெல்லாம் கிடைத்ததா என மக்களிடம் அமைச்சர் வினவினார். பின் மக்களோடு அமர்ந்து மனிதின் குரல் நிகழ்வை கேட்டு மகிழ்ந்தார். அதனையடுத்து திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரச்சார வாகனத்தை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Kishan Reddy

இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர், மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டார். அவரிடம் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேட்டதற்கு முதலில் தேர்தல் வரட்டும் பிறகு சொல்வதாக தெரிவித்தார்.

பாஜக அரசியலுக்காக அமலாக்கத் துறையை பயன்படுத்துவதாக பேசபடுகிறதே என்று கேட்டதற்கு, அது அவர்களுடைய அரசியல் ஸ்டேட்மெண்ட், அமலாக்கத்துறை அரசியலுக்காக செயல்படாது. விதிமுறைகள், சட்டதிட்டங்கள் படி தான் செயல்படும், அமலாக்கத்துறை வீட்டில் அமர்ந்து கொண்டிருக்காது சோதனை செய்யத்தான் செய்யும், சிபிஐ, அமலாக்கத்துறை நாட்டின் வளர்ச்சிக்காக வேலை பார்க்கிறது என்றார்.