kodanadu estate
kodanadu estate pt desk
தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: “மேற்கு வங்கத்தில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்”- அரசு வழக்கறிஞர்

PT WEB

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

முன்னதாக அது கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அவர், ‘இந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி போலீசார் இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை இடைக்கால அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் இல்லாததால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிபதி ஸ்ரீதரன் வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கொடநாடு

இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிபிசிஐடி போலீஸின் மற்றொரு குழு மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விசாரணையை மேலும் விரிவுபடுத்த சிபிசிஐடி போலீசார் தலைமையில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், “தற்போது வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலன் விசாரணை குறித்து நீதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது. எலக்ட்ரானிக் உரையாடல்கள் குறித்து குஜராத் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அறிக்கைகள் பெறவேண்டிய நிலை இருப்பதால், புலன் விசாரணை தொடர்பாக 19 செல்போன் டவர்களின் லொகேஷன்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது நீதிபதி ஸ்ரீதரிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்” என்றார்