தமிழ்நாடு

நெய்வேலி விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணம் - எதிர்ப்பால் சிபிசிஐடி அதிகாரி மாற்றம்

Sinekadhara

விருத்தாசலம் சிறையில் விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.

வழக்கை இதுவரை காவல் ஆய்வாளர் தீபா என்பவர் விசாரித்து வந்த நிலையில், துணை காவல் கண்காணிப்பாளர் குணவர்மன் என்பவரை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளனர். உயிரிழந்த செல்வமுருகனின் வீட்டில் குணவர்மன் தற்போது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.

முன்னதாக, விசாரணையின்போது உயிரிழந்த செல்வமுருகனின் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவர் கடந்த 4ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இன்றுவரை உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கு விசாரணை கடந்த 6ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தீபா தலைமையில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.

நெய்வேலி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கும்போது, ஒரு ஆய்வாளரை மற்றொரு ஆய்வாளர் விசாரிப்பதால் முழுமையான தகவல்கள் கிடைக்காது எனவும், எனவே ஆய்வாளருக்கு உயர் அதிகாரியை வைத்துதான் விசாரணையைத் மேற்கொள்ளவேண்டும் எனவும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனால் தற்போது ஆய்வாளர் மாற்றப்பட்டு சென்னையை சேர்ந்த டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.