காவிரி நதிக்கரை டெல்டா மாவட்டங்கள் திராவிடக் கட்சிகளின் கோட்டையாக நீண்டகாலமாக திகழ்கின்றன. கருணாநிதிக்கு இருக்கும் பூர்வீக செல்வாக்கு, எம்ஜிஆர்-ஜெயலலிதா கால அதிமுக வளர்ச்சி, முக்குலத்தோர், வன்னியர், பட்டியலினத்தவர், மீனவர், சிறுபான்மையினர் போன்ற சமூக வாக்கு வங்கிகள் இப்பகுதி அரசியலை நிர்ணயிக்கின்றன. கூட்டணிக் கட்சி மாற்றங்கள் புதிய கூட்டணிகள் வாக்குப் பிளவுக்கு வழிவகுக்கின்றன.
உலகின் பழைமையான அணைகளில் ஒன்றான கல்லணையைத் தன் மடியில் தாங்கி, சோழப் பேரரசின் நினைவைப் பறைசாற்றும் நதி காவிரி. கர்நாடகாவில் பிறந்து, மேட்டூர் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து, டெல்டா மாவட்டங்களைச் செழிக்கச் செய்யும் இந்த நதி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வோடும், அரசியலோடும் பிரிக்க முடியாத அங்கம் வகிக்கிறது.
ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் பிராந்தியமாக திகழ்ந்த இப்பகுதி, 1967இல் அண்ணா தலைமையிலான திமுகவின் எழுச்சிக்குப் பிறகு, காவிரி மண்டலம் திராவிடக் கட்சிகளின் பாசறையாக, கோட்டையாக மாறியது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்து வளர்ந்த பகுதி என்பதால், திமுகவுக்கென தனி செல்வாக்கு உண்டு. அதேசமயம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் அதிமுகவும் இங்குப் பலமாக வேர் ஊன்றத் தொடங்கியது.
காவிரி மண்டலத்தில் முக்குலத்தோர், முத்தரையர், வன்னியர், பட்டியலினத்தவர்கள், மீனவர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர். தஞ்சை மற்றும் திருவையாறு தொகுதிகள் திமுகவின் அசைக்க முடியாத கோட்டைகள். ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டையில் அதிமுக பலமாக இருந்தாலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தது அதிமுகவுக்கு பின்னடைவு.
திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதிகள் திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் இங்கு வலுவாக உள்ளனர். அதேசமயம், ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி என்பதால், ஸ்ரீரங்கத்தில் அதிமுகவுக்கென தனி செல்வாக்கு இன்றும் தொடர்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்தத் தொகுதியான திருவாரூர் தொகுதியில் அதிமுக ஒருமுறைகூட வென்றதில்லை. அதேபோல், திருத்துறைப்பூண்டி தொகுதி இடதுசாரிகளின் எஃகுக் கோட்டையாகத் திகழ்கிறது.
கடலோர அரசியல், மத நல்லிணக்கத்தின் அடையாளமான நாகையில், மீனவ மற்றும் சிறுபான்மையின வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இடதுசாரிகள் மற்றும் விசிகவினர் இங்கு பலமாக உள்ளனர். மயிலாடுதுறையில் வன்னியர் மற்றும் பட்டியலின வாக்குகளைப் பொறுத்தே வெற்றி அமைகிறது. புதுக்கோட்டை மாவட்டம் எப்போதும் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டியைக் காணும் களம்.
விராலிமலையில் சி.விஜயபாஸ்கர் மூலம் அதிமுக தனது பிடியைத் தக்கவைத்துள்ள நிலையில், ஆலங்குடி மற்றும் கந்தர்வகோட்டையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வருகை, கழகங்களின் வாக்குகளைப் பிரிக்கக்கூடும். அதிமுக கூட்டணியில் இம்முறை அமமுக இணைந்திருப்பது முக்குலத்தோர் வாக்குகளை அந்த கூட்டணிக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதே சமயம் சசிகலா கட்சி போட்டியில் இறங்கியிருப்பதும், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததும் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
70 ஆண்டுகால கனவான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது... திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்குவது, நிலத்தடி நீர் உப்பாவதைத் தடுக்கத் தடுப்பணைகள் கட்டுவது காவிரி படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முழுமையாகப் பராமரிப்பது போன்றவை இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக இருக்கிறது