காவிரி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
காவிரி நீர்ப்பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அந்த வரைவுத் திட்டத்தில் நதிநீர் பங்கீட்டிற்காக 9 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் அதிகாரம் மிக்க அமைப்பாக இது இருக்கும் என கூறியுள்ள மத்திய அரசு, அதற்கு பெயர் எதையும் அளிக்கவில்லை. இந்த அமைப்பில் தலைவர் தவிர 8 உறுப்பினர்களும், ஒரு செயலாளரும் இருப்பர். அமைப்பின் உறுப்பினர்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை உண்டு. ஒரு கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தது 6 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவேண்டும், கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசுச் செயலர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.