தமிழ்நாடு

‘கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு இருந்தது’ - மருத்துவமனை அறிக்கை வெளியீடு

webteam

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் முதலில் பின்னடைவு ஏற்பட்டது, இருப்பினும் மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராகி வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் திமுக தொண்டர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜாத்தியம்மாள், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்குள் உள்ளனர்.

காவேரி மருத்துவமனை அருகே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் தொண்டர்கள் நுழைய முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.