காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் இம்மாதம் 29ம் தேதி வரை காத்திருப்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காவிரி பிரச்னையை எழுப்பினார். அப்போது பேசிய அவர், ஆந்திர முதல்வர் அந்த மாநில நலன்களை பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எம்பிகள் ஆதரிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதால் மத்திய அரசு கலைந்து விடாது என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், எனவே மாநில உரிமைகளை பாதுகாக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தையும், காவிரி விவகாரத்தையும் ஒப்பிட வேண்டாம் எனத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், இவை இரண்டையும் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருவதாக அவர் சுட்டிகாட்டினார். மத்திய அரசின் பதிலுக்காக வரும் 29ம் தேதி வரை பொறுத்திருப்போம் என்றும் நடவடிக்கை இல்லாவிட்டால் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.