தமிழ்நாடு

தலைமை நீதிபதி தஹில் ரமாணி முன் இன்று வழக்கு விசாரணை இல்லை

Rasus

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை இல்லை என தெரிய வந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ‌ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள ‌வழக்குகளின் பட்டியலை பதிவுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், நீதிபதி துரைசாமியும் முதல் அமர்வில் வழக்குகளை விசாரிப்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா ஏற்கப்ப‌டவில்லை என்றாலும், ராஜினாமா கடிதம் அனுப்பியவர் எவ்வாறு வழக்குகளை விசாரிப்பார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை இல்லை எனத் தெரியவந்துள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்குகள் விசாரணை இல்லை என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு நீதிமன்ற அறைக்கு வெளியே அறிவிக்கையாக ஒட்டப்படும். முன்னதாக விதிமீறல் கட்டடங்கள், நில ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி நடவடிக்கை உட்பட 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.