தமிழ் டிவி சீரியல்கள் pt
தமிழ்நாடு

டிவி சீரியல்களில் ஆபாச காட்சிகள்.. தணிக்கை வாரியம் அமைக்க கோரிக்கை.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

டிவி சீரியல்களில் அதிகமாக ஆபாச காட்சிகள் இடம்பெறுவதால், சின்னத்திரைக்கு தணிக்கை வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்து வழக்கு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

டிவி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும், அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே அவை ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கில் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிவி சீரியல்களில் ஆபாச காட்சிகள்..

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. முறை தவறிய உறவுகள், பிறருக்கு கெடுதல் செய்வது, தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற தவறான ஒழுக்கங்கள் சீரியல்களில் கற்பிக்கப்படுகின்றன. அதோடு சில நேரங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும், நடிப்பவர்கள் ஆபாசமாக உடை அணிந்து வரும் காட்சிகளும், இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்களும் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் அந்த சீரியல்களை பார்க்கும் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். குடும்பங்களில் உறவுச்சிக்கள் ஏற்படுவதற்கும் சீரியல்கள் காரணமாக அமைகின்றன.

டிவி சீரியல்கள்

இவற்றை முறைப்படுத்த நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே டிவி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும், அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே அவை ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.