தமிழ்நாடு

வேளச்சேரியில் சீலிங் விழுந்து குழந்தைகள் காயமடைந்த விவகாரம் – பள்ளி நிர்வாகம் மீது வழக்கு

webteam

வேளச்சேரியில் உள்ள பள்ளியில் பால்சீலிங் பெயர்ந்து விழுந்து இரு குழந்தைகள் காயமடைந்த வழக்கில் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பப்ளிக் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷன் (6) மற்றும் சகானா (6) ஆகிய இருவரும் கடந்த 9 ஆம் தேதி மதியம் வகுப்பறையில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது வகுப்பறையின் பால்சீலீங் பெயர்ந்து குழந்தைகளின் தலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தர்ஷனுக்கு தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நிலை சீராக உள்ளது, ஆனால் சகானாவிற்கு பலத்த காயம் என்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை முடிந்து தற்போது உடல் நலம் தேறி தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், தனியார் பள்ளிகள், பள்ளியின் தரத்தை உறுதி செய்யாமல் விட்டதே இது போன்ற விபத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், 10 ஆம் தேதி வேளச்சேரி தாசில்தார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாவத்தின் கவனக் குறைவால் தான் விபத்து ஏற்பட்டதாக பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகம் மீது 338 பிரிவின் கீழ் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.