தமிழ்நாடு

“திமுக சின்னத்தில் போட்டியிட்டவர்கள் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்?”- புதிய வழக்கு சொல்வதென்ன?

Sinekadhara

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேரை எதிர்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமி நாதன், சதன் திருமலை குமார், ராகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த எட்டு எம்.எல்.ஏ.க்களையும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதக்கூடாது என உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 8 எம்.எல்.ஏ-க்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதமுடியும் என்றும் இது ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக்கூடாது எனவும் இந்த எம்.எல்.ஏ.க்களை எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதி, சட்டமன்றத்தில் தனி இருக்கை வழங்க கூடாது எனவும், சட்டமன்றத்தில் பேச தனியாக நேரம் ஒதுக்க கூடாது எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.