தமிழ்நாடு

பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்கு

webteam

பாஜக பெண் நிர்வாகிகளை இழிவாகப் பேசிய திமுக நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று பாஜக பெண் நிர்வாகிகளை இழிவாக பேசிய திமுக நிர்வாகியை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, உமாரதி ராஜன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அவர்கள் மீது முறையற்று தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மாநகர காவல் சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் 370 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.