தமிழ்நாடு

முதல் நாளில் ரூ.200 கொடுத்து தலைவி படத்தை தீபா பார்க்கலாம் - ஏ.எல்.விஜய் 

webteam

தலைவி படத்தை பார்க்க வேண்டுமென்றால் படம் வெளியாகும் முதல் நாளிலேயே ரூ.200 கொடுத்து தீபா பார்க்கலாம் என ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குநர் ஏ.எல்விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கெளதவ் வாசுதேவ் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரித்து வருகிறார். அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படங்கள் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,  ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் விளக்கம் அளித்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், குயின் என்ற புத்தகத்தை தழுவியே எடுக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டிலேயே இணையதள தொடர் தயாரிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு,₹ 25 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். ஆனால், 2002ஆம் ஆண்டுக்கு பின் அவர் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இல்லை. 2016ல் அவர் இறந்த பின் தான் வந்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை. அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். திரைத்துறையில் பொறுப்புமிக்கவனாக இருந்து வருவதால்தால் தயாரிப்பு, இயக்கம் என தேசிய விருதுகளை பெற்றுள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் அளித்த விளக்கத்தில், தலைவி என்ற பெயரில் தயாராகும் படம் ஏற்கெனவே வெளியான புத்தகத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்தப் புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. தலைவி படத்தை பார்க்க வேண்டுமென்றால் படம் வெளியாகும் முதல் நாளிலேயே ரூ.200 கொடுத்து தீபா பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். வாதங்களை கேட்ட உயர் நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்