தமிழ்நாடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்தப்பட்ட போராட்டம்: வேல்முருகன் மீதான வழக்கு ரத்து

நிவேதா ஜெகராஜா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 17 மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் 2018 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், செயலாளர்கள் வேணுகோபால், சரத்பாபு உள்ளிட்ட 17 பேர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் உள்ளிட்ட அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு பதிவு செய்து பிறகு சேர்க்கப்பட்ட பிரிவுகளை மாற்றி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து வேல்முருகன் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக பதிவான வழக்கில் முகாந்திரம் இல்லை என கூறி, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளர்.