Ashok, Anbumani pt desk
தமிழ்நாடு

கோவை: சைபர் க்ரைம் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் - பாமக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர சைபர் க்ரைம் பெண் காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக பாமக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

கோவை கணபதி புதூரை சேர்ந்தவர் பாமக பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி (35). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "யூ-டியூப் சேனல் மூலம் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று கோவை மாநகர சைபர் க்ரைம் அலுவலகத்துக்கு வந்த அசோக் ஸ்ரீநிதி, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் சுகன்யாவிடம், “முகமது இப்ராஹிம் மீது ஏன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவில்லை? அவர் ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்?” என கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து அவர், அந்த வழக்கின் சில ஆவணங்களை கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் சென்றதாக தெரிகிறது. இது குறித்து சுகன்யா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.