தமிழ்நாடு

நிலை தடுமாறி மரத்தில் மோதிய கார்: பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

kaleelrahman

மேட்டுப்பாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. படுகாயமடைந்த மூவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது தவுபீக் (16) முகமது ஆரிப் (16) இர்பான் (18) ஹர்ஷத் (16) காலீப் (16) ஆகியோர் விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கார் மூலம் கோத்தகிரி சாலையில் சென்றுவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பும்போது கோத்தகிரி சாலையில் உள்ள அரசு வனக்கல்லூரி அருகே கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது.

இதில், முகமது தவுபீக் மற்றும் முகமது ஆரிப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த காரை ஓட்டிய இர்பான் உள்ளிட்ட மூவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்த மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.