தமிழ்நாடு

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: பெண் அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

webteam

காளையார் கோவில் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீரனேந்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அலங்காரம் என்பவரது மகள் ஜெயப்பிரியா (27). இவர் இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஜெயப்பிரியா இன்று தனது இருசக்கர வாகனத்தில் காளையார்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

குறுங்கலிப்பட்டி பேருந்து நிலையம் அருகே வந்தபோது எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஜெயப்பிரியா இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஜெயப்பிரியாவை மீட்டு காளையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து ஜெயப்பிரியாவின் உடலை உடற்கூராய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.