தமிழ்நாடு

ரயிலில் 15 கிலோ கஞ்சா கடத்தல்

webteam

சேலம் ரயில் நிலையத்தில் தன்பாத் பயணிகள் விரைவு ரயில் வண்டியில் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் வழியாக ரயில் வண்டிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தன்பாத்திலிருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் பயணிகள் விரைவு ரயில் வண்டியில் சேலம் ரயில்வே காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேட்பாரற்று கிடந்த மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட அந்த மூட்டைகளில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் ரயில்வே காவல்துறையினர் கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகள் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.