தமிழ்நாடு

பிரபல கார் தயாரிப்பு நிறுவன தலைவர் மீதான மோசடி புகார் ரத்து

கலிலுல்லா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு எதிரான நம்பிக்கை மோசடி புகாரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், மஹிந்திரா கார் அதிகாரப்பூர்வ டீலரான ராஜராஜன் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் கார் ஒன்றை முன்பதிவு செய்து, முழு தொகையான 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி வாகனத்தை வழங்காததால், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா மற்றும் டீலருக்கு எதிராக புதுச்சேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2017ல் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரை ரத்து செய்யக் கோரி ஆனந்த் மஹிந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், டீலருக்கும், புகார்தாரருக்கும் இடையிலான பிரச்னையில், எந்த பரிவர்த்தனையிலும் தொடர்பில்லாத தனக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஆனந்த் மஹிந்திராவை நேரில் சந்தித்ததாக புகார்தாரர் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றும், டீலருடனான பிரச்னையில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி, புகாரை ரத்து செய்து உத்தரவிட்டார்.