தமிழ்நாடு

மெட்ரோ நிலையங்களில் முகக்கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணை ரத்து

நிவேதா ஜெகராஜா

மெட்ரோ ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கும் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில், "மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அபராதம் வசூலிக்க அதிகாரம் இல்லை. அந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது" என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

மெட்ரொ ரயில் நிர்வாகத்துக்கு அபராதம் வசூலிக்க அதிகாரமில்லை என ஆர்.முத்துகிருஷ்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின்கீழ் இன்று வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது, "தமிழக அரசின் சுகதாரத்துறைக்கே அபராதம் வசூலிக்க அதிகாரம் உள்ளது" என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், "மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக பகுதிகளை பொது இடமாக கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். " என கூறப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின், நீதிபதிகள் தரப்பில் "மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அபராதம் வசூலிக்க அதிகாரம் இல்லை. அந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.