கனடா அரசு 150-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கும் கனடா நாட்டில் தமிழ் மொழிக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு. தமிழர்களின் கலாச்சார பண்டிகைகளை கொண்டாடுவது, பொது அறிவிப்புகளை தமிழில் வெளியிடுவது என்று உலக தமிழர்களை கனடா அரசு சமீபகாலமாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், கனடா நாட்டின் 150வது சுதந்திர தினம் வருகிற ஜூலை 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடா தேசிய கீதத்தின் தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.