தமிழ்நாடு

வாடிப்பட்டி நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார் - எரிந்த நிலையில் தொழிலதிபரின் உடல் மீட்பு

EllusamyKarthik

வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே பற்றி எரிந்த காரில், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே விராலிபட்டி அருகே சொகுசு காரில் தீப்பற்றி எரிவதாக வாடிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு விரைந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினர், காருக்குள் எரிந்த நிலையில் கிடந்த ஒரு ஆணின் உடலை மீட்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில், எரிந்த நிலையில் மீட்கப்பட்டது மதுரை - ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் சிவானந்தத்தின் உடல் என்பது தெரியவந்தது. பழனி சென்று விட்டு மதுரை திரும்புகையில் இந்த அசம்பாவிதம் நேரிட்டிருப்பது தெரியவந்தது.

சிவானந்தம் காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடல் பின் இருக்கையில் மீட்கப்பட்டுள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளது. அவரை கொலை செய்து காருடன் எரிக்க முயற்சி நடந்ததா? என வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.