தமிழ்நாடு

தமிழகத்தில் சிக்கிய மலேசியத் தமிழர்கள்: தனி விமானத்தில் அனுப்பி வைத்த தொழிலதிபர்!

webteam

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்து நாடு திரும்ப முடியாமல் தவித்த 179 மலேசிய தமிழர்களை தொழிபதிபர் ஒருவர் தனிவிமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்துள்ளார்.

 உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரே சொல் கொரோனா. உலக நாடுகள் பல கொரோனா வைரஸால் உயிர் பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடக்கத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே வெளிநாட்டில் உள்ள அவரவர் நாட்டுமக்களை அந்நாட்டு அரசாங்கங்கள் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டன. அதன்பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதனிடையே மலேசியாவில் இருந்து தமிழகம் வந்திருந்த 179 மலேசிய தமிழர்கள் தமிழகத்திலேயே சிக்கினர். அவர்கள் மலேசியாவிற்குச் செல்ல வழியின்றி 14 நாட்கள் முடங்கிபோயினர். இதுபற்றிய தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார், தன்னுடைய சொந்த செலவில் தனி விமானத்தை ஏற்பாடு செய்தார்.

மேலும் இருநாட்டு அரசுகளிடையே விவரத்தை எடுத்துக்கூறி அனுமதியும் பெற்றார். இந்நிலையில் அவருடைய செலவில் தனி விமானம் மூலம் 179 மலேசிய தமிழர்கள் மலேசியா சென்றடைந்தனர்.