தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்?

webteam

தமிழகத்தில் இ.பாஸ் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோரும் அதிகரித்து வருகின்றனர். ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், வேலை தேடி நகரங்களுக்குச் செல்ல தயாராகிவரும் மக்கள் பொதுப் போக்குவரத்துக்காக காத்திருக்கின்றனர்.

தற்போது தொற்று குறைவாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து பேருந்துகளை இயக்குவது பற்றி ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டல வாரியாக அந்தப் பகுதிகள் அடையாளம் காணப்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்தை வசதியை மீண்டும் தொடங்கவேண்டும் என்று பலதரப்பினரும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

மேலும், போக்குவரத்து சேவையை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளன. எனவே செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் மட்டும் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.