தமிழ்நாடு

பஸ் ஸ்டிரைக்: மெட்ரோ ரயிலில் குவிந்த சென்னை மக்கள்

பஸ் ஸ்டிரைக்: மெட்ரோ ரயிலில் குவிந்த சென்னை மக்கள்

rajakannan

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மெட்ரோ ரயிலில் அதிக அளவிலான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் மாற்று வழியில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையை பொறுத்தவரை பேருந்து வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் பெரும்பாலும், எலக்ட்ரிக் ரயிலில் அதிக அளவில் பயணம் செல்வார்கள். ஷேர்  ஆட்டோ, கால் டாக்ஸி போன்றவற்றில் பயணம் செய்வார்கள். இந்த முறை சென்னை மக்கள் மெட்ரோ ரயிலில் அதிக மக்கள் பயணம் செய்துள்ளனர்.

சராசரியாக 20,000 பேர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்த நிலையில் தற்போது எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயிலில் நாளொன்றுக்கு 31,500 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.