தமிழ்நாடு

செல்போன் பார்த்தபடியே வேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..!

செல்போன் பார்த்தபடியே வேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..!

webteam

பழனியில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் செல்போனை பார்த்தபடியே நீண்டதூரமாக பேருந்தை ஓட்டிச்சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து செந்துறை செல்லக்கூடிய தனியார் பேருந்தை ஓட்டுநர் ராமகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். அவர் தனது செல்போனை பார்த்தபடி தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். ஓட்டுநரின் அலட்சியமான செயல்களால் அச்சம் அடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர். பயணிகள் கண்டித்தும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் ராமகிருஷ்ணன், கையில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு பேஸ்புக், வாட்ஸப் பார்த்தபடியே பேருந்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார்.

ஓட்டுநரின் செயலை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஓட்டுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். செல்போனை பார்த்தபடி பேருந்தை ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பயணிகளின் உயிரை பற்றிய கவலையில்லாமல் பேருந்தை அலட்சியமாக இயக்கிய ஓட்டுநர் மீது, வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.