தமிழ்நாடு

மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு

Sinekadhara

மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் ஓரிரு நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் தனது வகுப்பை முடித்துக்கொண்டு புல்லட் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அவர் சிறிது தூரம் சென்றபோது இருசக்கர வாகனத்தின் இன்ஜின் பகுதியில் உள்ள வயரில் மின் கசிவு ஏற்பட்டு சிறிய அளவில் தீப்பற்ற தொடங்கியிருக்கிறது. இதனை கவனித்த மாணவர் பிறகு சாலையோரமாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, இன்ஜினில் உள்ள வயரை பிடுங்கியுள்ளார். அப்போது தீ வேகமாக பரவி எரியத் தொடங்கியது. பிறகு தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்ட போதும் தீ அணையவில்லை.

இறுதியில் சாலையோரம் இருந்த மண் மூட்டைகளில் இருந்த மண்ணை இரு சக்கர வாகனத்தின் மீது கொட்டி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படாவிட்டாலும் இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. அதிக வெப்பமும், பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பியதும்தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தத சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.