தமிழ்நாடு

மணிமண்டபம் கட்டி காளையை கடவுளாக வழிபடும் மக்கள்..!

மணிமண்டபம் கட்டி காளையை கடவுளாக வழிபடும் மக்கள்..!

webteam

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் அவற்றை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகின்றனர். காளைகளை தங்கள் கடவுளாககூட போற்றுகின்றனர். இதனைப் பறைசாற்றும் விதமாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் கட்டி அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் பொந்தகம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் அறங்காவலர் சார்பாக, ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் வாழ்ந்த அந்தக் காளை,‌ பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்ற நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நோய்வாய்பட்டு இறந்துவிட்டது. தங்களது உறவு ஒன்று தங்களை விட்டு பிரிந்தது போல துயருற்ற அந்த கிராம மக்கள், முத்தாரம்மன் கோயில் வளாகத்திலேயே அந்தக் காளையின் உடலை புதைத்தனர்.

மக்களின் மனதை‌விட்டு அகலாமல், நீங்கா இடம் பிடித்ததால் அந்தக் காளைக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் ஒன்றை பொந்தகம்பட்டி கிராம மக்கள் கட்டியுள்ளனர். இதில் பொங்கல் திருநாள் மற்றும் அதன் நினைவு நாளில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பு பிராணியாக மட்டும் பார்க்காமல் கடவுளாக மக்கள் மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சாட்சியாகவே இந்த மணிமண்டபம் காட்சியளிக்கிறது.