தமிழ்நாடு

வங்கக் கடலில் மிதந்து வந்து மீனவர்கள் கையில் சிக்கிய புத்தர் சிலை

Rasus

வங்கக் கடலில் 15 கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து வந்த புத்தர் சிலையை, கடலூரை சேர்ந்த மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற மீனவர், தனது பைபர் படகில் 4 பேருடன் வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளா‌ர். கடலில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு சென்றபோது, மூங்கிலில் செய்யப்பட்ட மிதவை ஒன்று மிதந்து வந்திருக்கிறது. அதனைக் கண்ட பாலமுருகன் ஆச்சர்யம் அடைந்து அதனை எடுத்திருக்கிறார். அதில் பித்தளை உலோகத்தால் ஆன சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட புத்தர் சிலையும் சில மண்பாண்டம் மற்றும் குடுவைகள் இருந்துள்ளன.

கடலில் இருந்து கரை திரும்பியவுடன், இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து பொருட்களும் தற்போதும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.