முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக தொடரப்பட்ட பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
முன்னதாக கடந்த 28-ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் தயாநிதி மாறன் ஆஜராகி இருந்தார். அப்போது வழக்கு குறித்த தெளிவான ஆவணங்களை தயாநிதி தரப்புக்கு வழங்க, சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி கலாநிதி மாறன் புதிய மனு ஒன்றையும் அன்றைய தினமே தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி தயாநிதி, கலாநிதி உள்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரும் நேரில் ஆஜராகினர். அப்போது வழக்கு தொடர்பான தெளிவு இல்லாத பக்கங்களைத் தட்டச்சு செய்து வழங்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நடராஜன், தெளிவான நகலை வழங்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் மாதம் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.