தமிழ்நாடு

கொரோனா பரவல் எதிரொலி: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களின் நேரம் மாற்றம்!

Sinekadhara

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இயங்கும் என பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் துணை பொது மேலாளர் (மக்கள் தொடர்பு), செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதாலும், தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளாலும், பிஎஸ்என்எல் சென்னை வட்டம் அதன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் பணியாளர் ஏற்பாடுகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 2021 மே 1 முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணி வரை வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கும். பிஎஸ்என்எல் சேவைகளுக்கும், தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி போஸ்ட்பெய்டு கட்டணங்களை செலுத்துவதற்கும் ஆன்லைன் முறைகளை பயன்படுத்துமாறு பிஎஸ்என்எல் சென்னை வட்ட தலைமை பொதுமேலாளர் டாக்டர் வி கே சஞ்சீவி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையிலும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், தொய்வில்லாத சேவைகளை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.