தமிழ்நாடு

அண்ணனை குத்த முயன்றதில் தங்கை கணவர் கொலை.. குற்ற உணர்ச்சியில் இளைஞர் தற்கொலை

webteam

தங்கையின் கணவரைக் தவறுதலாக கத்தியால் குத்தியதில் கொலையுண்ட குற்ற உணர்ச்சியில் மனமுடைந்த மைத்துனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர் சிவக்குமார் (29). அவரது தம்பி சங்கர் (27). கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறில் அண்ணன் சிவக்குமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தபோது அதை தடுத்த சங்கரின் தங்கை கணவர் காளிராஜ் (32) மீது கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த காளிராஜை உறவினர்கள் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த தகவலை அறிந்த மைத்துனர் சங்கர், தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் சங்கரின் சடலத்தை கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கம்பம் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணன் தம்பி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கையின் கணவரை தவறுதலாக கத்தியால் குத்தியதில் நடந்த கொலை, அதற்காக மனமுடைந்து நடந்த தற்கொலை நிகழ்வு கம்பம் நகரில் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.