தமிழ்நாடு

ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி; தற்போது அரிசிக்கு ஜி.எஸ்.டியா? - உடனடியாக நீக்க கோரிக்கை!

ச. முத்துகிருஷ்ணன்

அரிசி மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க கோரி, தமிழ்நாட்டில் வரும் 16 ஆம் தேதி அரிசி ஆலைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.

“தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. வருடத்திற்கு ஒரு கோடி டன் நெல்லை அரைத்து அரிசியாக தயாரித்து வருகின்றோம். மத்திய அரசு உடனடியாக அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்காவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நோக்கி செல்லும்.

வரி விதிப்பால் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் அரிசி விலை உயர வாய்ப்புள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்புக்கு வரி விதித்ததை போல் தற்போது மத்திய அரசு அரிசிக்கு வரி விதிப்பைக் கொண்டு வந்துள்ளது. வரிகள் அனைத்தும் பொதுமக்கள் தலையில்தான் விழும். இதனை எதிர்த்து வருகின்ற 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என அவர்கள் தெரிவித்தனர்.