சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்கும் நோக்கிலும், சாதி கடந்து திருமணம் செய்யும் ஜோடிகளை பாதுகாக்கும் நோக்கிலும் கர்நாடகாவில் ’இவா நம்மவா’ என்ற தனிச் சட்டத்துக்கான மசோதாவை அம்மாநில காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருக்கிறது. ’இவா நம்மவா’ என்பது தமிழில் இவர் நம்மவர் எனப் பொருள்படக் கூடியது. இந்த சட்டத்தின் மூலம், சாதிய ஆணவக்கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், இதில் பதியப்படும் வழக்குகளுக்குப் பிணை கிடையாது. சாதி கடந்து திருமணம் செய்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது இச்சட்டத்தின் படி தண்டனைக் குரிய குற்றங்களாகும். இந்த நிலையில், இந்த சட்டம் ஆணவக்கொலைகளைத் தடுப்பதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தான், இதுபோன்றதொரு சட்டம் தமிழ்நாட்டிற்கு தேவை எனக் கூறியதோடு, இதுவே உண்மையான சமூகநீதி எனவும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழ்நாட்டில் கௌரவக் கொலைகளைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அதே கோரிக்கையை கர்நாடக அரசு “இவா நம்மவா” மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இது ஒருவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாக்கும் முக்கியமான முன்னேற்றமான நடவடிக்கை.
கௌரவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக இது ஒரு வலுவான பதிலாகும். இதுவே உண்மையான சமூக நீதி. குறைவான பேச்சு, அதிகமான செயல். இந்த முன்னேற்றமான முயற்சிக்காக சமூகநீதி காவலன் ராகுல் காந்தி அவர்களின் தலைமைக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்களின் முயற்சிக்கும் பாராட்டுகள். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கையில் இதை தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.