தமிழ்நாடு

“காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வதும் மனநலப்பிரச்னையே” - உயர்நீதி மன்றம்

kaleelrahman

மதுரை அல்லது திருச்சி மத்திய சிறையில் மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை சின்னச்சொக்கிக் குளத்தைச் சேர்ந்த ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிறையில் இருக்கும் மன நோயாளிகள் மற்றும் சிறைவாசிகளின் மன நலத்தை பேணும் வகையில் சிறப்பு மனநல சிகிச்சை குழுவினை திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் அமைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. மனைவி, மகள், தாய் உள்ளிட்ட உறவினர்களை கொலை செய்த குற்றங்களில் சிறையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களைப் பார்க்கவும், பேசவும் யாரும் வராததால் தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், அதீதபயம், கற்பனை, மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

சென்னை மனநல அமைப்பு மட்டுமே சிறைவாசிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இங்கும் குறைவான படுக்கை வசதிகளே இருப்பதால் குறிப்பிட்ட அளவிலான சிறைவாசிகள் மட்டுமே அது போன்ற சிகிச்சைகளுக்கு அனுப்பப் படுகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே மதுரை அல்லது திருச்சி மத்திய சிறையில் மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "இன்றைய சூழலில் குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பெரும்பாலானவர்கள் மனநல பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது போன்றவையும் மனநல பிரச்சனைகளின் வெளிப்பாடே.

குடும்பம் ஒருவகையில் அழுத்தங்களை உள்வாங்கிக்கொள்ளும் வடிகாலாக அமைகிறது. ஆனால் காவல்துறையினருக்கு, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த அழுத்தத்தின் வெளிப்பாடே இவை. கொரோனா ஊரடங்கிற்கு பிந்தைய நிலையில், அனைவருமே மனநல பிரச்னைகளோடே உள்ளனர். குடும்பப் பிரச்சனைகள் எழவும் இவையே காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை சாதாரண மருத்துவர்களைவிட மனநல மருத்துவர்களே அதிகம் தேவை" என தெரிவித்தனர்.

அரசுத்தரப்பில், சென்னையில் ஏற்கனவே மனநல சிகிச்சை மையம் உள்ள நிலையில், தென் தமிழக சிறைகளில் இருப்போரின் தேவைக்காக மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டுமென்பதால், வழக்கை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.