தமிழ்நாடு

100 நாட்களை கடந்த காலை சிற்றுண்டி திட்டம்: தாக்கம் எப்படி இருக்கு? அடுத்து என்ன செய்யணும்?

webteam

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் எப்படி செயல்படுகிறது. 100 நாட்களை கடந்த நிலையில் திட்டத்தை விரிவுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டபோது...

”தமிழக அரசு இலவச சிற்றுண்டி கொடுத்து 100 நாள் நிறைவேறி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. இந்த நூறு நாளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் கற்றல் எவ்வாறு முன்னேறி இருக்கிறது என்பதை அரசாங்கம் ஆவணப்படுத்தி இருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டுமெனில் ஊட்டச்சத்து நிபுணர்கள் சமயற்கலை வல்லுநர்கள் ஆலோசனைகளைப் பெற்று காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை ஒரே இடத்தில் இருந்து விநியோகிக்கலாமா என்பதை கிடைத்த அனுபவத்தின் வாயிலாக செய்ய வேண்டும்.

இது ஆரம்ப புள்ளி தான். இதுவரை பெற்ற அனுபவங்களைக் கொண்டு முன்னெடுக்கும் போது உடல் நலம் மட்டுமின்றி குழந்தைகளின் மனநலத்திலும் நல்ல அடிப்படை மாற்றத்தை உருவாக்கும் வித்தாக அமையும். பல குடும்பத்தினர் காலை சிற்றுண்டியை குழந்தைகளுக்கு வழங்க முடிவதில்லை என்கின்ற ஏக்கத்தை போக்கும் வகையில் இது அமைவதோடு குழந்தைகள் கல்வி கற்றலை பார்க்கும் கண்ணோட்டமும் மாறும். எனவே, இத்திட்டத்தை தமிழக முழுவதும் எடுத்துச் செல்லும்போது 360 டிகிரி கோணத்தில் அலசி ஆராய்ந்து இதில் உள்ள சவால்களை அரசு நிச்சயம் பகுப்பாய்ந்து எடுத்துச் செல்லும்.

கல்வி, ஆரோக்கியம் என ஒன்றிணைந்து பார்க்கும்போது நிச்சயமாக குழந்தைகளுக்கு பெரும் மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என தெரிவித்தார்.