உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர் புதியதலைமுறை
தமிழ்நாடு

குமரி: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர்-உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதை!

PT WEB

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(26). இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் பண்ணையூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று திரும்புகையில், பைக்கில் வந்தபோது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பைக்கில் இருந்த இரண்டு குழந்தைகள் லேசான காயத்துடன் தப்பினர். மனைவி பிரிய சோபாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே பலத்த காயமடைந்த பிரவீன் சுய நினைவை இழந்தார். கணவன், மனைவி இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், சோபா தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தலையில் காயமடைந்த பிரவீனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும், அவரது உடல் உறுப்பை தானம் செய்கிறீர்களா என்றும் மருத்துவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு பிரவீன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரவீனின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். இதில், கண்கள் திருநெல்வேலியில் உள்ள கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. சிறுநீரகம் மற்றும் நுரையீரல் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞனின் உடலுக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களுக்கு செலுத்தப்படும் அரசு மரியாதை, பிரவீன் உடலுக்கு செலுத்தப்பட்ட பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.