கரூரில் முதலாவது புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. 10 நாள்களுக்கு நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் 50 க்கும் அதிகமான அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் ஆகியவை சார்பில் கரூரில் முதலாவது புத்தகத் திருவிழாவை ஆட்சியர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். ஈரோடு ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகம் புரட்சி செய்யும் என்ற தலைப்பில் பேசினார்.
இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் 50 மேற்பட்ட அரங்குகளில் பல முன்னணி பதிப்பகங்கள் அறிவியல், வரலாறு, வரலாற்று நாவல்கள், ஆன்மிகம், சுய சரிதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்களை காட்சி மற்றும் விற்பனைக்கு வைத்துள்ளன. விற்பனையாகும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களின் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
தினமும் மாலை வேலையில் பட்டிமன்றம், அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.