தமிழ்நாடு

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

webteam

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்திற்கு இன்று மொட்டை கடிதம் ஒன்று வந்தது. அதில், குண்டு வெடிக்கும் என்று மட்டுமே எழுதியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அலுவலகம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ளது. 

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சத்ய பிரதா சாஹூ அறையிலும் அவரது உதவியாளர் அறையிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதற்கு முன்பு தலைமைச் செயலகத்திற்கு பலமுறை தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால் தற்போது தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கே ஒரு மொட்டை கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.