கோவையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று எம்ஜிஆர் பாடலை ஒலிபரப்பாத ஆல் இந்தியா ரேடியோவை கண்டித்து கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எம்.ஜி.ஆர் ரசிகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை - திருச்சி சாலை ராமநாதபுரத்தில் ஆல் இந்திய ரேடியோ நிலையம் உள்ளது. இந்த ரேடியோ நிலையத்திற்கு ஒரு தபால் கார்டு வந்துள்ளது. அதில், பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று ரஜினி பாடல்களை ஒலிபரப்பியதாகவும், ஆனால், எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று எம்ஜிஆர் பாடலை ஏன் ஒலிபரப்பவில்லை? இதனை கண்டித்து ரேடியோ நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவோம் என்று அந்த தபால் கார்டில் எழுதப்பட்டிருந்தது. இந்த கார்டை பார்த்த ரேடியோ நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரிpல் விரைந்து வந்த காவல் துறையினர் அந்த கார்டை கைப்பற்றியதுடன் ரேடியோ நிலையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். தபால் கார்டு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தீவிர எம்ஜிஆர் ரசிகர் என்று கூறப்படுகிறது. அவர் யார்? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.