தமிழ்நாடு

‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலைகள்’ - மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

webteam

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரேணுகா கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பகல் முழுவதும் தூங்கும் ரேணுகா, இரவில் துணி துவைப்பது, சமைப்பது போன்ற வேலைகளை செய்வார். அதேபோல் பகலில் தூங்காமல் நடமாடுபவர்களை கண்டால் தாக்கியுள்ளார். 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரேணுகா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் மீண்டும் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாண்டியனும், அவரது உறவினர்களும் ரேணுகாவை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு ஒன்றில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை அடையாளம் கண்ட பாண்டியன், அது ரேணுகாதான் என உறுதி செய்தார். கிணற்றில் தவறி விழுந்து ரேணுகா உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.