Pamban pt desk
தமிழ்நாடு

பாம்பன்: திடீரென உள்வாங்கிய கடல் - தரைதட்டி சேதமடைந்த நாட்டுப் படகுகள்

பாம்பன் வடக்கு கடல் பகுதி திடீரென உள்வாங்கியது. இதனால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரைதட்டி சேதமடைந்தது.

webteam

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் பாம்பன் வடக்கு பாக்ஜலசந்தி கடல் பகுதியில் திடீரென சுமார் 200 மீட்டர் வரை உள் வாங்கியது. இதனால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரைதட்டி சேதமடைந்துள்ளன.

boat

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், வடக்கு லைட்ஹவுஸ் கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் அரியவகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியே தெரிந்தன. மேலும் பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரை தட்டின.

இதனால் மீன் பிடிக்கச் செல்லும் நாட்டு படகு மீனவர்கள் கடலில் நடந்து சென்று படகுகளை கடலுக்குள் இழுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். கடல் உள்வாங்கும் நேரங்களில் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் மீன்பிடி படகுகளை கடல் நீர் பெருக்கெடுக்கும் வரை மீனவர்கள் காத்திருந்து மீட்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

pamban

பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுக பகுதியில் தூண்டில் வளைவுகளுடன் கூடிய துறைமுகம் அமைத்துத் தந்தால், கடல் உள்வாங்கும் நேரங்களில் மீன்பிடித் தொழில் பாதிக்காமல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என அப்பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.