தமிழ்நாடு

பாஜக பொது சிவில் சட்டத்திற்கு திட்டம் தீட்டுகிறது..அதன் அடுத்த இலக்கு அதுதான்!-திருமாவளவன்

webteam

பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது என்றும், அவர்களின் அடுத்த இலக்கு இந்தியாவை இந்துமத நாடு என்று அறிவிப்பது ஒன்று தான் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சங்பரிவார் கொட்டம் தலை விரித்தாடுகிறது. ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார், அதனை கண்டித்து திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறேன். பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அண்மையில் மாநிலங்களைவில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்து விவாதத்திற்கு உட்படுத்தினார்கள். ஒவ்வொரு கூட்டுத்தொடரின் போதும் வெள்ளிக்கிழமை 2 மணிக்கு மேல் தனிநபர் மசோதா தாக்கல் செய்யலாம். பின்னர் அரசாங்கம் மசோதாவை தயார் செய்யும், ஆனால் அனைவரின் மசோதாவும் எடுத்து கொள்ளப்படுமா என்றால் எடுத்து கொள்ள படாது. இத்தனை ஆண்டு காலத்தில் இரண்டு முறை தான் தனி நபர் மசோதா சட்டமாகி இருக்கிறது. மற்றவை சட்டமாக்கபடுவதில்லை. ஆட்சியாளர்கள் விரும்பினால் ஒரு நாள் மசோதாவை கொண்டு வருவார்கள்.

பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் உறுப்பினர் 2020ல் தாக்கல் செய்த மசோதா அண்மையில் விவாதத்திற்கு வந்தது. பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் மாநிலங்களைவில் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்பரிவார் அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் அதிகம் இருந்தாலும், ஒரே செயல்திட்டமாக தான் இருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அங்கம் வகிக்ககூடிய குழு புதிய அரசியலமைப்பு சட்டத்தை, 32 பக்க முன்னோட்ட அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

2024ல் மீண்டும் மோடி பிரதமரானால் அமல்படுத்த போகும் அரசியலமைப்பு சட்டம் இது தான். இவர்கள் இலக்கு ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டம் தான். அவர்களின் ஒட்டுமொத்த இலக்காக இருப்பது இந்தியாவை இந்து மதம் சார்ந்த நாடாக அறிவிக்க வேண்டும், இந்து ராஷ்டிரா என அறிவிக்க வேண்டும் என்பது தான்.

அதற்கு முன் நிபந்தனையாக சிலவற்றை செய்ய வேண்டும். பாபர் மசூதி இடிப்பது, ஜம்மு காஷ்மீரில் 370 சட்ட பிரிவை நீக்குவது, பொதுசிவில் சட்டம், அண்டை நாடுகளில் இருந்து வந்தால் குடியுரிமை பறிப்பு போன்றவற்றை செய்யவேண்டும். அதை முடிந்தவரை செய்துமுடித்துவிட்டது பாஜக அரசு. அகதிகளில் இஸ்லாமியர்கள் இருந்தால் குடியுரிமை தருவதில்லை. அவர்களின் இறுதி இலக்கு அரச மதமாக இந்து மதம் இருக்க வேண்டும் என்பது, இதற்கு தடையாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டும் தான்.

இதனால் தான் அவர்கள் ஒவ்வொரு கனவு திட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள். எஞ்சி இருப்பது பொது சிவில் சட்டம் தான், இதையும் நிறுவி விட்டால் அரசியலமைப்பு சட்டம் நீர்த்து போகும்.

புரட்சியாளர் அம்பேத்கர் பொதுசிவில் சட்டத்தை தடுத்து சட்டத்தை கொண்டுவர, அவருடைய கடுமையான உழைப்பு காரணமாக இருந்தது. அரசியல் நிர்ணய சபை தான் அப்போதைய சபை, குடியரசு தலைவர் தலைமையில் கூடும். அப்போது கடுமையான விளக்கங்கள் கேட்டார்கள், கடைசியாக முழுமையாக ஏற்கப்பட்டது என்று பேசினார்.