தமிழ்நாடு

ஜன.30இல் தமிழகம் வருகிறார் ஜே.பி.நட்டா - கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க திட்டம்

ஜன.30இல் தமிழகம் வருகிறார் ஜே.பி.நட்டா - கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க திட்டம்

Veeramani

ஜனவரி 30 ஆம் தேதி மதுரை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் சார்பில் அதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சூழலில் பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா வரும் ஜனவரி 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதி மதுரையில் தங்கும் அவர், 234 தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன்பின்னர் மாநில நிர்வாகிகள் மற்றும் சில மாநில கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

ஜனவரி 29 ஆம் தேதியே தமிழகம் வரும் ஜே.பி.நட்டா, அன்று புதுச்சேரியில் நடைபெறும் பாஜக பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி ஜனவரி 23 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் தமிழகத்தில் மூன்று நாட்களில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக பொங்கல் பண்டிகையின் போது ஜே.பி.நட்டாவும், ராகுல் காந்தியும் ஒரே நாளில் சென்னை வந்திருந்தனர். ராகுல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியிலும், நட்டா பாஜகவின் பொங்கல் நிகழ்ச்சியிலும் துக்ளக் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.