தமிழ்நாடு

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் - எல்.முருகன்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் - எல்.முருகன்

webteam

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என  பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவும், மற்றவர்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை, தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டாலும், இப்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே வேலை, தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்குள்ளேயோ, வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்குக் கூட இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாவதாகவும், சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், இதனால் போலி இ-பாஸ் வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் கணவன் - மனைவி சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை என்று இதுபோன்று எண்ணற்ற உறவுகள், இ-பாஸ் முறையால் அவதிக்கு உள்ளாகும் குமுறல்கள் தமக்கு செய்தியாக வந்து சேர்வதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் முறை இல்லாத நிலையில், மக்கள் படும் சிரமத்தை தமிழகத்திலும் இ-பாஸ் வழங்கும் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.